Wednesday, October 17, 2012

யார் இந்த இராமதாசு?இவரின் பின்புலம் என்ன ?



எப்படி இவர் தமிழக அரசியலிலே ஒரு முக்கிய புள்ளியாக உள்ளார்?

எப்படி இந்த மனிதனுக்கு இவ்வளவு அரசியல் செல்வாக்கு?

இவரையும் பின்பற்ற, இவர் சொல்வதையும் கேட்க எப்படி பல லட்சம் பேர் உள்ளனர்?

மருத்துவர் இராமதாசு, இந்தியாவிலே லல்லுவுக்கு கொடுக்கப்பட்டுள்ள இடத்தை தமிழகத்திலே இவருக்கு கொடுத்துள்ளன பத்திரிக்கைகளும் மற்றும் பலரும் ஒரு வித்தியாசத்தோடு, லல்லு எதை செய்தாலும் கோமாளித்தனமாகவும் இராமதாசு எதைச்செய்தாலும் ஆக்ரோசமாகவும் சொல்லால் தாக்குகின்றனர், இதைப்பற்றி இந்த கட்டுரையில் அலசுவோம்.
இந்த கேள்விகளுக்கான விடைகளும், அதன் பின்னுள்ள சபால்ட்டர்ன்(அடித்தட்டு) மக்களின் எழுச்சியும் தான் இன்றைக்கு பத்திரிக்கைகளாலும் மற்ற பலராலும் மருத்துவர் இராமதாசு மட்டையடிக்கப் படுவதற்கான காரணம். இதற்கெல்லாம் பதிலுரைக்க சில விடயங்களை சற்று விரிவாக பார்க்கவேண்டும்.

இராமதாசுவின் பின் புலம் வன்னிய சமுதாய மக்கள் தான்.
இது எல்லோரும் அறிந்ததுதான். அது எப்படி ஒரு சமுதாயமே கண்மூடித்தனமாக இவரை பின் பற்றுகிறது. (இதுதான் பலரின் வயிற்றெரிச்சலுக்கு காரணம், இதுவேதானமருத்துவர் இராமதாசு மீது சொல்லடியாக விழுகிறது).

முக்கியமான ஒரு தகவல், பலராலும் இதுவரை தவறாகவே புரிந்துகொள்ளப்பட்ட விடயம், வட மாவட்டங்களிலே வன்னியர்கள் பெரும் எண்ணிக்கையில் இருந்தாலும் அவர்கள் எல்லாம் பெரும் பணக்காரர்களாகவோ, நிலக்கிழார்களாகவோ இல்லை, பெரும்பாலானோர் ரெட்டியார்,முதலியார் (அ) உடையார், நாயுடு சமுதாயத்தினரின் நிலங்களில் கூலி வேலை செய்தவர்களே. எனவே பெரும்பாலான வன்னிய சமுதாயத்தினர் பண வசதிபடைத்தவர்கள் அல்ல, ஆதிக்க சாதியாகவும் இல்லை, சமுதாயம் நலிவடைந்த நிலையிலேதான் இருந்தது.
சில தசம(பத்து) ஆண்டுகளுக்கு முன் வரை எந்தவித விழிப்புமின்றி பொருளாதாரம், அரசியல், கல்வி என அனைத்திலும் நலிவடைந்தே இருந்தது இச்சமூகம். இந்த சமயங்களிலே தென் தமிழகத்திலே பெரும் எண்ணிக்கையிலிருந்த முக்குலத்தோர் சமூகத்தினர் காங்கிரசிலும் பின் திராவிட கட்சிகளிலும் கோலோச்சினர், ஆனால் வட தமிழகத்தில் வன்னியர்கள் பெரும் எண்ணிக்கையிலிருந்தாலும் ரெட்டியார்,உடையார் (முதலியார்) சமுதாயத்தினர் கையில் தான் அரசியல் இருந்தது.

பெரும் எண்ணிக்கையிலிருந்தும் அரசியல் மற்றும் பொருளாதார முன்னேற்றமின்றி இருந்த சமூகத்தை உயர்த்தும் நோக்கத்தில் திரு.இராமசாமி படையாட்சி அவர்கள் உழவர் உழைப்பாளர் கட்சி என ஆரம்பித்து தேர்தலிலே போட்டியிட்டனர், தென்னாற்காடு மாவட்டத்திலே 18ல் 17 தொகுதிகளிளை வென்றனர் யாருடைய கூட்டணியுமில்லாமல் அப்போது முதுபெரும் தலைவர் காமராசர் அவர்கள் காங்கிரஸ் தலைவர்.

அப்போதே வன்னிய சமூகம் மாற்றத்துக்கு தயாராக இருந்தது, சரியான வழிகாட்டுதலுக்காகவும், தலைவனுக்காகவும் ஏங்குவது புரிந்தது. அதன் பின் காமராசர் அவர்கள் இராமசாமி படையாட்சி அவர்களிடம் பேசி காங்கிரசில் சேரச்செய்தார், இராமசாமி அவர்களுக்கு மந்திரி பதவியும் அளித்தார், ஆனால் காங்கிரஸ் என்ற சமுத்திரத்திலே கலந்த சிறு ஓடையாகிவிட்டது.அதன் பின் திரு இராமசாமி படையாட்சியார் மீதிருந்த பேரன்பினாலும் பெரு மதிப்பினாலும் காங்கிரசை எதிர்த்து சமுதாய முன்னேற்றம் என யாரும் பேசவில்லை.
அவரது கால கட்டத்துக்கு பிறகு மீண்டும் அதே இழிநிலை. இந்த நிலையில் தான் 80 களின் தொடக்கத்திலே திரு ஏ.கே.நடராசன் என்பவரால் வன்னியர் சங்கம் மீண்டும் உத்வேகம் பிடித்தது. அப்போது திண்டிவனம் பொறுப்பாளராக இருந்தவர்தான் மருத்துவர் இராமதாசு, திரு ஏ.கே.நடராசன் அவர்கள் அரசு பணியிலிருந்ததால் அவரால் முழுமூச்சாக சமுதாயப்பணியிலே ஈடுபடமுடியவில்லை. அப்போது சமுதாயப்பணியாற்றிய போராளிதான் மருத்துவர் இராமதாசு, ஏதோ திடீரென ஒரு நாள் வன்னிய சமூகம் மந்தையாடு மாதிரி அவர் பின்னால் போகவில்லை. ஒரு நல்ல அற்பணிப்புள்ள தலைவனுக்காக ஏங்கிக்கொண்டிருந்தபோது மருத்துவரின் போராட்டகுணம், அற்பணிப்பை கண்டு மனமுவந்து ஏற்றுக்கொண்டது வன்னிய சமூகம். மருத்துவர் இராமதாசு அவர்கள் அரசியல் சமூக வாழ்வில் எத்தனை கூட்டங்கள், எத்தனை கிராமங்களிலே சுற்றுப்பயனம் செய்தார், எத்தனை கல்லடிகள், எத்தனை தலைமறைவு இரவுகள் என்பது வெளி உலகுக்கு தெரியாது, வன்னிய சமுதாய மக்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை, இதுவெல்லாம் தெரியாமல் ஏதோ அவர் திடீரென அதிட்(ஷ்)டத்தினால் தலைவரானது போல் எண்ணிக்கொண்டு பொறாமையால் அவரை தாக்குகின்றனர்.

No comments:

Post a Comment